கீழ்படிதல் - மிக மிக அவசியம்

ஆபிரகாம் கீழ்ப்படிந்தான் ஈசாக்கை திரும்ப பெற்றுக்கொண்டான்.

சவுல் கீழ்படியவில்லை ராஜ்ய
பாரம் அவனை விட்டு போனது

ஆதாம் கீழ்படியவில்லை ஏதேனை விட்டு துரத்தப்பட்டான்

இயேசு கிறிஸ்து கீழ்படிந்தார் எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் அவரை உயர்த்தினார்

தேவனிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொள்ள கீழ்படிதல் மிக மிக அவசியம்.

இந்த உலகத்தில் மாயை எவை ?

மாயை, மாயை எல்லாம் மாயை - பிரச 1-2

இந்த உலகத்தில் மாயை எவை ?

1) மாயையான பட்டம், பதவி:-  தானியேல் தேவ பக்தன் அரசனுக்கு அடுத்த ஸ்தானத்தில் எல்லா அதிகாரங்களோடு இருந்து வந்தார். ஆனால் அவருடைய பதவி சத்துருவின் சதித்திட்டத்தால் பறிக்கபட்டு, ஒரு கொலை பாதகனை போல சிங்க கெபியில் தள்ளபட்டார்
(2) 127 நாடுகளுக்கு மன்னன் ஆக இருந்த  ஆகாஸ்வேருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த ஆமான் எவ்வளவு புகழோடு வாழ்ந்து இருப்பான்.
முந்தின நாள் இரவு சக்கரவர்த்தியான ஆகாஸ்வேருக்கு அடுத்த மிகப் பெரிய ஸ்தானம். ஆனால் மறுநாள் மொர்தெகாய் என்ற யூத மனிதனை குதிரையில் ஏற்றி அந்த குதிரையை  வழி நடத்தி செல்லும் குதிரைக்காரன் வேலை அவனுக்கு கிடைத்தது (எஸ்தர் 6-11)

மாயையான மனைவி:- (1) கர்த்தருடைய தாசனாகிய யோபுக்கு ஒரு மனைவி இருந்தாள். ஆஸ்தியும், ஜசுவரியம், மக்கள் செல்வம் யோபுக்கு குறைவின்றி இருந்த நாளில் அவரை நேசித்து கனப்படுத்தினாள். ஆனால் சுழ்நிலை மாறிய போது அவள் தலைகிழாக மாறிவிட்டாள். தன் புருஷனை சாகும்படியாக ஆலோசனை சொல்லுகிறாள். எத்தனை பயங்கரமான காரியம்.

மாயையான பிள்ளைகள்:- யாக்கோபுக்கு "உமக்கு தலை பிள்ளையாக அழகு குமாரன் பிறந்திருக்கிறான்" என்று அவனிடம் சொன்ன போது அவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பான். ஆனால் பின் நாளில் அந்த மகனை சபிக்கும் வார்த்தைகளை பாருங்கள் "நீ மேன்மை அடைய மாட்டாய்" ஆதி 49-4
(2) தகப்பன்,தாய், சகோதரன் லாபான் ரெபேக்காளை மிகவும் அதிகமாக நேசித்து வந்தார்கள். ரெபேக்காளுக்கு திருமணம் ஒழுங்கானது. அவள் முன்பின் அறியாத இடத்திற்கு, பழக்கமில்லாத மனிதன் உடன் புறப்பட ஆயத்தமாகிறாள். அப்போது பெற்றோரும், சகோதரரும் 10 நாட்கள் தங்களுடன் தங்கி செல்ல மன்றாடி கேட்கின்றனர். ஆனால் ரெபேக்காள் அவர்கள் விருப்பத்திற்கு இணங்காமல் தன்னுடைய மணவாளன் ஈசாக்கை சந்திக்க புறப்பட்டு செல்கிறாள். (ஆதி  24-55) இது தான் மக்கள் என்ற மாயையின் காரியம்

மாயையாகிய ஜசுவரியம், ஆஸ்தி, செல்வம்:- யோபுக்கு 7000 ஆடு, 3000 ஒட்டகம், 500 ஏர் மாடு,  500"கழுதை, ஏராளமான வேலைக்காரர்களை ஒரே நாளில் இழந்தான் (யோபு 1:14-17

தேவ பிள்ளையே உலக மாயைகளான கணவன், மனைவி, உற்றார், உறவினர், பட்டம், பதவி, ஆஸ்தி, ஜசுவரியம், உத்தியோகம், வீடு, வாசல் எதின் பேரிலும் உன் பற்றையும், பாசத்தையும், நம்பிக்கையும் ஒருக்காலும் வைத்து விடாதே. இவை எல்லாம் தங்களுக்கு சிறகுகளை ஊண்டு பண்ணி கொண்டு ஒரு நாள் உன்னை விட்டு ஆகாய மார்க்கமாய் பறந்து போய் விடும் (நீதி 23-5)

பொய்யான மாயைப் பற்றிக்கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
யோனா 2:8

வாலிப ஊழிய மோகம் எங்கே செல்லுகிறது

வாலிப ஊழிய மோகம் எங்கே செல்லுகிறது!

இன்றைய ஊழியங்களில் எதில் சீக்கிரம் முன்னேறலாம் என்று பார்த்து அதில் வாலிபர்கள் தள்ளப்படுகிறார்கள்!

அதில் சில!

1. தீர்க்கதரிசனம் சொல்வது.
2.  எளிதில் பிசாசின் மோதிரத்தினால் அற்புதம் செய்வது.
3. ஆராதனை வீரர்கள் போன்ற ஊழியங்களில் சீக்கிரம் பிரபலமடைந்துவிடலாம்.

அதோடு பணம்,புகழ்,செல்வாக்குகள் ஒங்கும்! ஒரு ஆல்பம் போட்டுவிட்டால் அப்புறம் 10 சபைகளில் கூப்பிட்டு பிரபலமடைய செய்துவிடுவார்கள் போன்ற நோக்கமே காரணம்.

இதை நோக்கியே இன்றைய
இளைஞர்கள் கூட்டங்கள் படையெடுக்கிறது.

இதை அறிந்துக்கொண்ட சில  வியாபார நோக்கமுள்ள ஊழிய முதலைகள் இதை விற்ப்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்க்காக தீர்க்கதரிசன வகுப்புகள்,
அற்புதங்கள் செய்யும் வகுப்புகள்.
போன்ற மாய்மாலத்தை ஏற்ப்படுத்தி
ரூபாய் 30,000,50,000, 100,000 கொடுத்து
பட்டத்தையும் வாங்கி வைத்துவிட்டு சபை சபையாய் வாய்ப்பு தேடுகிறார்கள்.

அதற்க்கு தகுந்தார்போல் இன்றைய உள்நாட்டு ,வெளிநாட்டு சபைகளும் அற்புதம்,தீர்க்கதரிசனம், ஆராதனை மோகங்களிலும், கூத்துகளிலேயும்
நாட்டம் கொண்டு சத்தியத்தை விலக்கி வைத்து மக்களை பிரியப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

ஐயோ! என் தேசம் பெரிய அழிவை நோக்கி ஒடுகிறதே! கண்டுக்கொள்ள ஒருவனுமில்லையே!!!

இப்படிப்பட்டவர்கள் குருகிய காலங்களில் அதிகபணம் சம்பாதித்து வரும்பொழுது
சத்தியம் டான்ஸ் ஆடுகிறது.  குரங்கு கையில் பூமாலை கிடைத்ததுபோல் ஊழியத்தை பிச்சி எடுத்து சின்னா பின்னமாய் மாற்றிவிடுகிறார்கள்.

இரவா,பகலா தெரியாத ஆராதனை கூட்டங்கள், கலர் கலர் டிஸ்கோ டான்சர்கள்,
கலர் கலர் பல்புகள்,புகை போட்டு, மக்களை ஆராதனை பெயரில் ஏமாற்றுகிறார்கள்.

பார்த்தால் சினிமாக்காரன் தோற்க்கும் அளவிற்க்கு
இன்றைய கிறிஸ்தவ ஊழியர்கள்,ஆராதனை வீரர்கள் கும்மியடிப்பதை பார்த்தால்!!

இயேசப்பா நீங்க சீக்கிரம் வந்துடுங்க!
தாங்க முடியல இந்த தேசத்தின் கொடுமைகளை என மனது சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

நாம் வேதத்தின்படி யோசித்தால்?
இது யாருக்கு செய்யும் ஆராதனைகள்?
யாரை மேன்மைப்படுத்தும் ஆராதனைகள்?
சிலுவை சுமந்த கிறிஸ்துவுக்கா?
என்பது சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது!

இதற்காக நீங்கள் காட்டும்  வேத மாதிரி ஒன்றே, ஆனால் அவனை இப்படி செய்ய சொன்னதாக வேதம் கூறவில்லை!ஆராதனை என்றாலே   தாவிது கூத்தாடினான்,தாவிது ஆராதனை வீரர்கள்  ஏற்ப்படுத்தினான். நான் சொல்றேன் விழுந்துபோனதும் தாவிதுதான்.

இயேசு இந்த ஆராதனை  செய்தாரா?
இயேசு இதை கேட்டாரா?
பவுல் இப்படி செய்தாரா? கேட்டாரா?
யோவான் செய்தாரா?கேட்டாரா?
அல்லது இயேசுவின் காரியங்களை கண்டும்,கேட்டும், அறிந்து எழுதின,
அவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவர் லூக்கா கேட்டாரா?
இயேசுவின் தாயாகிய மரியாள் கேட்டார்களா?

அல்லது இயேசுவின் சகோதரர்கள் கேட்டார்களா?

யாருமே கேட்க்காமல் யாரை பிரியப்படுத்தப்பா செய்றிங்க!

பழையக்கால பரிசுத்தவான்கள் இன்று இருந்தால் உங்களாலே ,உங்களுக்காகவே இரத்த சாட்சியாய் மரித்திருப்பார்கள்?

எல்லாவற்றிற்க்கும் காரணம் ஒன்றே பணம்! பணம் ! பணம்!

தேசமே மனந்திரும்பு! இனி காலம் செல்லாது! இதுவே கடைசிகாலத்தின் அடையாளம்!

ஊழியம் என்பது ???

ஊழியம்  என்பது பிரஷங்கம் பண்ணுவது மட்டும் இல்லை

இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அவரை அறிவிப்பது ஊழியம்.

தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு ஜெபிப்பது ஊழியம்.

கிறிஸ்துவை அறிந்தும் உபதேசத்தில் இல்லாமல் வாழ்கிறவர்களுக்கு
சத்தியத்தை சொல்வது ஊழியம்.

நன்மை செய்வதற்கு திராணி இருக்கும் போது ஏழைகள் ஊனமுற்றவர்
திக்கற்றவர்கள் விதவைகள் அனாதைகள் முதியவர்கள் குருடர்கள் செவிடர்கள்  இவர்களுக்கு உதவி செய்வது ஊழியம்.

தேவனுக்கு உண்மையாக ஆத்துமா பாரத்தோடு சத்தியத்தை சொல்லி
ஊழியம் செய்கிவர்கள் மிஷினறிகளை தாங்குவது  ஜெபிப்பது கொடுப்பது ஊழியம்

தேசத்துக்காக ஜெபிப்பது  தேச ஜனங்கள்    எல்லாருடைய ரட்சிப்புக்காக ஜெபிப்பது  இவைகளை செய்வதேல்லாம் ஊழியம்  தான்..

தேவன் தருகின்ற ஆசிர்வாதம்

தேவன் தருகின்ற ஆசிர்வாதம்

கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். ஆதி. 39 : 5

தேவன் நம்மை ஆசீர்வதிப்பது மாத்திரமல்ல நம் மூலம் பிறரையும் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் யோசேப்புடன் இருந்து அவன் கையின் பிரயாசங்களை ஆசீர்வதித்தார். அது மட்டுமல்ல யோசேப்பின் நிமித்தம் போத்திப்பார் வீட்டையும் ஆசீர்வதித்தார். இன்றும் தேவன் தமது பிள்ளைகள் மூலம் பிறரை ஆசீர்வதிக்கிறார். ஏசாயா 44 : 3-ல், “உன் சந்ததியின் மேல் என் ஆவியையும் உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்”. தேவன் உலக பிரகாரமான ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் தருகிறார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் எவை? பாவ மன்னிப்பின் நிச்சயம், பரிசுத்த ஆவியின் நிறைவு, பரிசுத்த ஆவியின் வரங்கள் ஆகியவையாகும்.

ஆதி. 9 : 1-ல் ‘தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்தார்’. நோவாவின் குடும்பத்தை ஆசீர்வதிக்க காரணம் என்ன? துன்மார்க்கம் நிறைந்த உலகில் நோவா நீதிமானாக வாழ்ந்தான். தேவன் பேழையை செய்யச்சொன்னபோது செய்தான். பேழையில் புகச் சொன்னபோது புகுந்தான். எனவே தேவன் ஆசீர்வதித்தார். பாவம் நிறைந்த உலகில் நாம் பரிசுத்தமாக வாழ தேவன் எதிர்பார்க்கிறார். நாம் உலகத்தின் பாவங்களால் கறைபடாது வாழும்போது தேவன் நம்மையும் நம் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பார்.

ஆதி.12 : 2-ல் ‘நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி உன்னை ஆசீர்வதித்து, உன் பேரை பெருமைப்படுத்துவேன்.’ கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்ததால் கர்த்தரை ஆபிரகாம் விசுவாசித்தான். அவன் தன் ஊரை, இனத்தை விட்டு தேவன் காட்டிய இடத்திற்கு சென்றான். தன் ஏக சுதனையும் பலி செலுத்த முன் வந்தான். தேவிசத்தத்திற்கு, தேவ நடத்துதலுக்கு, அவன் தன்னை அற்பணித்தான். அவன் முழுமையாக தன்னை தேவ கரங்களில் அற்பணித்தான். நாமும் நம்மை தேவ கரங்களில் அற்பணிக்கும்போது தேவன் ஆசீர்வதிப்பார்.

ஆதி. 25 : 11-ல் ‘அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார்’. ஈசாக்கு ஆபிரகாமின் வாக்குத்தத்த மகன். அவனையும் தேவன் ஆசீர்வதித்தார். ஈசாக்கு தியான புருஷன். இவனிடம் சில சிறந்த பண்புகள் இருந்தன். ஈசாக்கு வெட்டிய துரவுகளை பகைவர் கைப்பற்றிய போது அவன் அவைகளை விட்டு வேறு துரவுகளை வெட்டினான். அவைகளும் ஆக்கிரமிக்கப்பட்டபோது பின்னும் வேறு துரவுகளை வெட்டினான். அவன் தியானம், தாழ்மை, மன்னித்தல் ஆகிய பண்புடையவனாக இருந்தான். ஆதனால் ஆசீர்வதித்தார். நாமும் இப்பண்புகளுடன் இருக்கும்போது ஆசீர்வதிப்பார்.

செய்தி: கட்டுகளை அறுக்கும் கர்த்தர்


செய்தி: Bro. David

அந்நாளில் நான் உன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை. எரேமியா 30 : 8

தேவன் நம்முடைய ஜனங்களாய் நம்மை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிதான ஆசீர்வாதமாக உள்ளது. முதலாவது தேவன் தம் ஜனங்கள் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார். நம்மை தேவன் தம்முடைய ஜனங்களாய் மாற்ற முதலாவது அவர் நம் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு கானான் தேசத்தை கொடுக்கிறார். வல்லமையுள்ள தேவன் இறங்கி வந்து ஓரேப் பர்வதத்தில் மோசேயை சந்தித்தபோது மோசேயிடம் முதலாவது நான் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொள்வேன் என்று வாக்குரைத்தார். அதன்படி பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்ட அந்த இரவில் மாபெரும் இரட்சிப்பை கட்டளையிட்டார். புதிய ஏற்பாட்டில் தேவன் நம்மை பாவங்கள், சாபங்கள் ஆகிய கட்டுகளிலிருந்து விடுவிக்க தம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை பழுதற்ற ஆட்டுக்குட்டியாக நமக்காக தந்தார்.

அதன் மூலமாக நாமெல்லாரையும் தம்முடைய சொந்த ஜனமாக ஏற்றுக்கொண்டார். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவா 1 : 12) நாம் முதலாவது நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போதுதான் நாம் அவர் ஜனங்களாக மாறுகிறோம். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறப்பதால், ஒழுங்காக ஆலயத்திற்கு போவதினால் மடடும் அல்ல இயேசுவை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அவர் நம்மீது உள்ள பாவத்தின் கட்டுகளை சாபத்தின் கட்டுகளை அறுத்து இனி நம்மை ஒருவரும் அடிமை என்று கூறாதபடி நம்மை தம் சொந்த ஜனமாக ஏற்றுக்கொள்கிறார். ஆம் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டுகள் அறுக்கப்பட்டு அவர் ஜனங்களாய் இருப்பது எத்தனை மகிழ்ச்சி.

ஜெபம்: நான் உன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று வாக்கு உரைத்த சர்வ வல்ல தேவனாம் பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியானவரே, இந்த நாளிலும் கூட எனது நிழலின் மறைவிலே என்னை பின் தொடர்ந்து வருகின்ற பாவ நுகத்திலிருந்து என்னை விடுவித்தருளும். நீர் என்னை உம்முடைய மகனாய் மகளாய் தெரிந்து கொண்டமைக்காக நன்றி. நீர் விரும்பும் மகனாக மகளாக வாழ என்னை அர்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக

ஆத்துமாவை நிரப்பிடும் கர்த்தர் - செய்தி: Bro. David


செய்தி: Bro. David

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். எரேமியா 31 : 25

தேவன் தம்முடைய ஜனங்களுக்கு அருளும் மாபெரும் ஆசீர்வாதம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். தம் ஜனங்களை பாவ சாபங்களிலிருந்து மீட்டு, நோய்களை குணமாக்கி, காயங்களை ஆற்றுவது மட்டுமல்லாமல் ஆவிக்குரிய நன்மைகளால் நிரப்புகிறார். அவர் அப்படியே விட்டுவிடாமல் “அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்கு பயப்படும்படிக்கும் நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும், ஒரே வழியையும் கட்டளையிட்டு” தேவன் தம் ஜனங்களுக்கு புதிய இருதயத்தை தந்து வேதத்தை தந்து அனுதினமும் ஆத்துமாவை போஷிக்கிறார். மட்டுமன்றி தம்முடைய பரிசுத்த ஆவியால் நம்மையும், நம் பிள்ளைகளையும் நிரப்புகிறார்.

நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். யோவேல் 2 : 28 கடைசி நாட்களில் தேவஜனங்களுக்காக தேவன் வைத்திருக்கும் உன்னதமான ஆசீர்வாதங்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் தேவனோடு உறவாடும் உன்னதமான அனுபவங்களை நாம் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஏனெனில் நாம் அவருடைய ஜனங்களாயிருக்கிறோம். அவர் நம்முடைய தேவனாக இருக்கிறார். இந்த நாட்களில் நாமும் வாஞ்சையுடன் ஆவிக்குரிய அனுபவங்களுக்காக ஜெபிப்போம். தேவன் நமக்கு கொடுக்கும் உன்னதமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம். சபைகளில் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி ஊற்றப்படுவதாக. பரிசுத்த ஆவியானவரின் உன்னத பெலனுடன் சாட்சிகளாய் ஜீவிக்க ஆத்தும ஆதாயம் செய்து அவர் வருகைக்கு ஆயத்தமாவோம்.

ஜெபம்: நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் என்று வாக்குறைத்த படியே என்னை அனுதினமும் உம்முடைய கிருபையால் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்து போன என் ஆத்துமாவை தேற்றி வழி நடத்தி வருகின்ற தயவுக்காக நன்றி இயேசுவே. எனது வாழ்வின் மறைவான பாவங்களுக்கு என்னை விலக்கி, உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் நிறைவைக் காணச்செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக