உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் - விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள் (1 சாமுவேல் 30:3,4). தங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டு போனார்கள் என்று தாவீது கேள்விபட்டபோது, எந்த தகப்பனால் சும்மா இருக்க முடியும்? தாவீதும் அவனோடு இருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்களாம். அந்த அளவு இருதயபாரத்தால் அவர்கள் நிறைந்திருந்தார்கள். அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி; நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அதன்படியே அவர்கள் அந்த தண்டை பின்தொடர்ந்த போது, அவர்களுடைய பகைஞர் கொள்ளையாடிக் கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். ஒரு வேளை நீங்களும் பெலனில்லாமல் போகுமட்டும் அழுகிறீர்களோ? உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பாடுகள் நிமித்தம் யார் என்னை விடுவிப்பார் என்று கதறுகிறீர்களோ? தாவீதின் தேவன் இன்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் நம் கண்ணீரை துடைக்கிற தேவன். அவரை உறுதியாய் பற்றிக் கொண்டு என்னை விடுவியும் என்று அவர் பாதத்தை பிடித்து கொண்டு விடாதிருங்கள். உங்கள் கண்ணீர் அவர் பாதத்தில் சிந்தப்படட்டும். அப்பொழுது ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’ - (யோவன் 16:20) என்று நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்து உங்கள் துக்கங்களை சந்தோஷமாய் மாற்றுவார். கண்ணீரை துடைத்து கொள்ளுங்கள். நம் கண்ணீர் ஒரு நாளும் வீணாய்போவதில்லை. அது அவருடைய துருத்தியில் வைக்கப்பட்டிருக்கிறது. அன்று ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன், அவளுக்கு பதிலை கொடுத்ததினால் அல்லவா, அவள் அவருக்கு எல்ரோயி என்று பேரிட்டாள்! ஏல்ரோயி என்பதற்கு ‘என்னை காண்கின்ற தேவன்’ என்று பொருள். ஒருநாள், நாம் கர்த்தருடைய சமுகத்தில் நிற்கும்போது, நமது கண்ணீரால் நிறைந்த துருத்தியை நம்மிடம் கொண்டு வந்து நம் தேவன் காட்டுவார், அருமை மகளே, மகனே, இதோ நீ சிந்திய கண்ணீர்! நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் பார், ஒரு சொட்டையும் விடாமல் நான் சேர்த்து வைத்திருக்கிறேன்’ என்று காட்டுவார். மட்டுமல்ல, தமது புத்தகத்தை திறந்து, எதற்காக கண்ணீர் வடித்தோம் என்பதையும் தாம் எழுதியிருப்பதை நமக்கு காட்டுவார்! அல்லேலூயா!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

எல்லையை பெரிதாக்கும் தேவன்

எல்லையை பெரிதாக்கும் தேவன் - விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


 தேவரீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும். நாளாகமம்: 4–10 வேதத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் யாபேஸ். அவனுடைய பெயரின் அர்த்தம் என்னவென்றால் துக்கம். சபிக்கப்பட்டவன். அவன் தாய், ‘நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன்’ (நாளாகமம் 4:9) என்று சொல்லி அவனுக்கு ‘யாபேஸ்’ என்று பெயரிட்டாள். தன் தாயே தன்னைப் பற்றி இப்படி சொன்னால், சகோதரர்களும், நண்பர்களும், உறவினர்களும் எப்படியெல்லாம் அவனை துக்கப்படுத்தி இருப்பார்கள்? அவனுடைய மனம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருக்கும் என்று சற்றே யோசித்துப்பாருங்கள். ஆனாலும் அவன் கொஞ்சமும் சோர்ந்து போகாமல் தேவனை நோக்கிப் பார்க்கிறான். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி ‘தேவரீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்’ (நாளாகமம்: 4–10) என்று வேண்டிக்கொண்டான். அவன் வேண்டிக் கொண்டதை தேவன் அருளினார். அதுமாத்திரமல்ல, யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் சிறப்பு பெற்றவனாக இருந்தான் என்று வேதம் சொல்கிறது. ஒருவேளை அவன் தன் சூழ்நிலையை மட்டுமே பார்த்திருந்தால் துக்கத்தில் ஆரம்பித்த அவனுடைய வாழ்க்கை துக்கத்தில்தான் முடிந்திருக்கும். ஆனால் அவனோ ‘ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறவேன்’ என்று சொன்ன தேவனை மட்டுமே நோக்கிப் பார்த்தான். அதனால்தான் தன் சகோதரரைப் பார்க்கிலும் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், கனம் பெற்றவனாகவும் இருந்தான். ஆம் பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்களும் இந்த யாபேசைப் போல பெற்றோர்களாலும் மற்றவர்களாலும் நொறுக்கப்பட்டும், நெருக்கப்பட்டும் துக்கத்தின் பாதையில் கடந்துசென்று கொண்டிருக்கிறீர்களா? உங்களை விசாரிக்க ஒருவர் உண்டு.உங்கள் கண்ணீரையும், கதறலையும் காண்கிற தேவன் ஒருவர் உண்டு.அவர் மனுஷன் பார்க்கிற விதமாக பார்க்கவில்லை. மனுஷனோ முகத்தைப் பார்க்கிறவன். ஆனால் தேவனோ உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறவர். ஆகையால், நீங்கள் எப்பொழுதெல்லாம் சோர்ந்து போகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் யாபேஸ் தேவனை நோக்கிப் பார்த்தது போல் நீங்களும் தேவனை மட்டுமே நோக்கிப்பாருங்கள். அவர் நேற்றும், இன்றும் என்றுமே மாறாத தேவன். யாபேசை ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதிக்க வல்லவராய் இருக்கிறார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

தேவன் தேடும் மனிதன்

தேவன் தேடும் மனிதன் 

Message by Bro. Raffi Jashua

Universal Revival Youth Fellowship 

 கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, பலமுள்ளவைகளை வெட்க்கபடுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளை தெரிந்துகொண்டார். (1 கொரி 1:27) நம்முடைய தேவன் மிகவும் வித்தியாசமானவர், அவர் யாரை கொண்டும் மிகபெரிய காரியங்களை செய்ய வல்லவர். தேவன் ஒரு படித்த ஞானிகளையோ அல்லது பலசாலிகளையோ தேடி செல்வதில்லை. என்னால் ஒன்றும் முடியாது, நான் எளியவன் என்னை கொண்டு ஆண்டவர் எதாவது செய்ய முடியுமா என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் அவர் உங்களை கொண்டு தான் பெரிய காரியங்களை செய்வார் என்று மேலே வாசித்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஆம் தேவன் இது போல நினைத்து கொண்டிருந்த அநேகரை அவர் பயன்படுத்திருக்கிறார். நாம் கிதியோனை குறித்து அநேக முறை கேள்விபட்டிருக்கலாம். அவரை தேவன் எப்படி பயன்படுத்தினார் என்பதை பற்றி சற்று தியானிக்கலாம். நியாயதிபதிகள் 6 ம் அதிகாரத்தை திருப்பி கொள்வோம். இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மறந்து அந்நிய தேவர்களை வணங்கி கொண்டிருந்தனர், அதனால் தேவன் அவர்களை மீதியானியர் கைகளில் 7 வருடம் ஒப்பு கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானியருக்கு பயந்திருந்தபடியால் குகைகளிலும், மலைகளிலும் பதுங்கி இருந்தனர். இஸ்ரவேலர் விதைக்கும் பொது மீதியானியர் திரள் கூட்டமாய் வந்து, அவர்களது விளைச்சலை கெடுத்து போவார்கள். மீதியானியர் செய்கைகளால் அவதியுற்ற இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டனர் (வச 6-10). ஒரு நாள் கர்த்தருடைய தூதன் கர்வாலி மரத்தின் கீழ் வந்து அமர்ந்தார் (வச11). அங்கே ஒரு மனிதன் மீதியானியருக்கு பயந்து கோதுமையை மறைத்து வைத்து கொண்டிருந்தான், அவன் பெயர் கிதியோன். அப்பொழுது கர்த்தருடய தூதன் அவனை நோக்கி "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார்" என்றார் மேலும் "உனக்கு இருக்கும் இந்த பலத்தோடே போ, இஸ்ரவேலரை மீதியானியர் கையில் இருந்து இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா" என்றார். அதற்கு அவன், இந்த காரியம் எப்படி என்னால் முடியும், என்னுடைய குடும்பத்தில் மிகவும் சிறியவன் என்று தயங்கினான், ஆனால் கர்த்தர் அவனை விடவில்லை, "நான் உன்னோடே கூட இருப்பேன்" என்று சொல்லி அவனை தேற்றினார். இது போல தான் நாமும் சில நேரங்களில் ஆண்டவர் நம்மை அழைக்கும் போது, என்னால் முடியாது, எனக்கு தகுதி இல்லை, நான் பலவீனமானவன் என்று காரணங்களை சொல்லி விலகி செல்ல பார்க்கிறோம். அப்படிப்பட்ட நம்மை நோக்கி தான் கர்த்தர் சொல்கிறார் "நான் உன்னோடே கூட இருப்பேன்", என்று, ஆண்டவர் நம்முடன் இருக்கும் போது எந்த காரியத்தையும் குறித்து தயங்காமல் உடனே செயல்பட வேண்டும். கிதியோன் கூட ஆண்டவர் இருந்த படியால், வெறும் 300 பேரின் துணையுடன், மீதியானியரை சந்திக்க பாளையத்திற்கு சென்றான். மீதியானியரின் எண்ணிக்கை கடற்கரை மணல் போல திரளாக இருந்தது. கர்த்தர் அவனோடு இருந்தபடியால் இரட்சிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கையில் பானை, தீவட்டி மற்றும் எக்காளத்துடன் சென்றனர். இவர்கள் எல்லையின் ஓரத்தில் நின்று கொண்டு பானைகளை உடைத்து, எக்காளத்தை ஊதினார்கள். இந்த சத்தத்தை கேட்ட படையினர் தங்களை தாங்களே பட்டயத்தால் வெட்டி கொண்டனர். இப்படியாக கர்த்தர் மீதியானியர் கையில் இருந்து இஸ்ரவேல் மக்களுக்கு இரட்சிப்பை கிதியோன் மூலம் கிடைக்க செய்தார். நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், அவர் தம்முடைய பணிக்காக அழைக்கும் போது கீழ்படிந்து சென்றால் நிச்சயமாகவே அவர் உங்கள் மூலம் அநேகருக்கு இரட்சிப்பு கிடைக்க செய்வார். ஒருவேளை கிதியோனை போல நான் சிறியவன், என்னால் முடியுமா என்று கேள்விகள் இருந்தால், உங்களை பார்த்து தேவனாகிய கர்த்தர் சொல்கிறார் (எரே 1:7,8) இல், "சிறு பிள்ளை என்று சொல்லாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்" என்று. சாமுவேலை போல, "ஆண்டவரே சொல்லும் அடியேன் கேட்கிறேன்" என்று உடனே அவருடைய வார்த்தைக்கு கிழ்படிந்து செல்வோம். ஒருவேளை இந்த நாட்களில் “தேவன் தேடும் மனிதன்" நீங்களாக கூட இருக்கலாம்.

இயேசுவின் தந்தை, நம் தந்தை!

இயேசுவின் தந்தை, நம் தந்தை!

 செய்தி: சகரியா பூணன்

"என்னைப் போலவே" மாம்சத்தில்ள வந்து சோதிக்கப்பட்டும் பாவம் செய்யாது வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பெற்றிடும் ஜெய வாழ்க்கையை "குமாரானுடைய சாயலுக்கு ஒப்பான வாழ்க்கை" என ரோமர்8:29-கூறுகிறது. இவர்களே, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்கள் எனவும் 28-ம் வசனம் எடுத்துரைக்கிறது. ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழும்வரை, பிதாவுக்கு ஏக புத்திரனான ஒரே ஒரு குமாரன் மாத்திரமே இருந்தார்! ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, மகதலேனா மரியாளைப் பார்த்து " மரியாளே, நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் ஏறிப்போகிறேன்" எனக் கூறினார். தன் சொந்த பிதா, அவர்களுக்கும் பிதா என இயேசு குறிப்பிட்ட முதல் இடம் இதுதான். இயேசு தன் சீஷர்களை முதலாவதாய் "ஊழியக்காரர்கள்" (Servants) என்றே அழைத்தார். பின்பு அவர் "இனி நான் உங்களை ஊழியக்காரன் என்று சொல்லுகிறதில்லை . . . உங்களை சிநேகிதர் (Friends) என்றே அழைப்பேன்" (யோவான் 15:15) எனக் கூறினார். இதற்கு பின்புதான், யோவான் 20௦: 17-ல் அவர்களை "தேவனுடைய குமாரர்" (Sons) என அழைத்தார். இன்று உலகில் தேவனுடைய ஊழியன் என்பதை மேன்மையாக எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் தேவனுடைய குமாரனாய் இருப்பதே அதிக மேன்மையுள்ளதாய் இருக்கிறது! உங்கள் வீட்டில் இருக்கும் வேலைக்காரன் அல்ல, உங்கள் குமாரனையே நீங்கள் மேன்மையாக எண்ணுவீர்கள். தேவனுடைய பார்வையிலும், இவ்வாறு "குமாரனுடைய சாயலுக்கு" மாறும்படி தங்களை ஒப்புக் கொடுத்தவர்களையே தேவனும் அதிகமாய் விரும்புகிறார்.

உங்கள் வீட்டில் நான்கு குமாரர்கள் இருந்தால், அவர்கள் நான்கு பேரையும் ஒரே விதமாய் நேசிப்பீர்கள். உங்கள் மூத்த மகனுக்கு என்ன நன்மை செய்வீர்களோ, அதே நன்மையை உங்கள் இளைய மகனுக்கும் செய்வீர்கள். இங்குதான் நம்மை ஆறுதல்படுத்தும் ஓர் மிகப்பெரிய சத்தியம் அடங்கியிருக்கிறது. "இயேசுவுக்கு" (முதல்பேறான மூத்த மகனுக்கு) பிதா என்ன செய்தாரோ, அதையே எனக்கும் (இளைய குமாரானுக்கும்) செய்திடுவார்! தேவன் தன் பிள்ளைகளிடத்தில் பட்சபாதம் காட்டுவதே இல்லை. இயேசுவை அன்புகூர்ந்தது போலவே என்னையும் அன்புகூருவார்! இயேசுவை பாதுகாத்தது போலவே நம்மையும் பாதுகாப்பார்! சிலுவையின் பாடுகள் அவருக்கு இருந்தாலும், அவரின் ஒரு எலும்புகூட முறிக்கப்பட பிதா அனுமதிக்கவேயில்லை! கால் எலும்பை முறிக்க சேவகன் வருவதற்கு முன்பாகவே, பிதா தன் குமாரனுடைய ஆவியை ஏற்றுக்கொண்டார்! பகைஞர்கள் அவரை சூழ்ந்து குன்றின் பாதாளத்தில் தள்ளி கொலை செய்த முயன்றபோது, அங்கிருந்து அவரை நடத்தி, கூட்டத்தின் நடுவில் மறைந்து போகும்படி செய்தார். சிலுவையில் அறைந்து கொன்றதை, தற்காலிகமான செயலாய் மாற்றி, மூன்றாம் நாளில் தன் குமாரனை உயிரோடு எழுப்பினார்! இப்போது, முதற்பேரான இயேசுவை எப்படி பிதா அன்புகூர்ந்து, நடத்தி, பாதுகாத்தாரோ, அதைப் போலவே அவருடைய இளைய குமாரர்களாகிய நம்மையும் அன்புகூர்ந்து, நடத்தி . . . நித்தியம் மட்டும் பாதுகாத்திடுவார். அவருடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாய் மாறுவதற்கு தங்களை ஒப்புக்கொடுத்தும், இந்த சத்தியத்தை விசுவாசிக்காதவர்கள், தேவனையே விசுவாசிக்காதவர்கள்! பிதாவாகிய தேவனை நிந்தனை செய்பவர்கள்! தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காதவர்கள்!! மனந்திரும்பி, விசுவாசித்து, இந்த ஆண்டு முழுவதும் "தேவனுடைய குமாரர்களாய்" தேவனடைய பாதுகாப்பில் வாழ்ந்திடக் கடவோம்!!

கர்த்தருடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்

கர்த்தருடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்

 வளமிக்க வயல்களைப் பாழாக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்தியரும் திரள் திரளாக இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில், இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் ஆளுகை செய்துவருகிறார்கள். மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்தியரும் ஒட்டகத்தில் கூட்டம் கூட்டமாக வந்து ஏழாண்டு காலமாக தேசத்தை கொள்ளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கொள்ளைக்காரர்களுடைய மந்தைகள் நாலாபுறமும் சென்று பச்சைப் பசேலென காட்சியளிக்கும் அனைத்தையும் கபளீகரம் செய்கின்றன. இஸ்ரவேலரோ நம்பிக்கையிழந்து நிற்கிறார்கள். ஏன் இத்தகைய துன்பம்? ஏனென்றால் இஸ்ரவேலர் பொய் தெய்வங்களை வழிபடுகிறார்கள். அதனால், ஒடுக்குகிறவர்களிடம் கர்த்தர் அவர்களை ஒப்படைத்துவிடுகிறார். தாக்குப்பிடிக்க முடியாத கட்டத்தில் இஸ்ரவேலர் உதவிக்காக கர்த்தரை நோக்கி கூக்குரலிடுகிறார்கள். அவர் செவிகொடுத்துக் கேட்பாரா? இஸ்ரவேலருடைய அனுபவம் நமக்குப் புகட்டும் பாடம் என்ன? நியாயாதிபதிகள் 6:1-6. ‘பராக்கிரமசாலியா’? இஸ்ரவேல் விவசாயிகள் பொதுவாக எருதுகளைப் பூட்டி காற்றோட்டமான வெட்டவெளியில் கோதுமையை போரடிப்பார்கள். அப்போதுதான், கோதுமை மணிகளை முறத்தில் எடுத்துவிடும்போது பதர்களைக் காற்றடித்துச் செல்லும். ஆனால் தேசத்தைக் கொள்ளையிட்டுச் செல்லத் துடிக்கும் கொள்ளைக் கூட்டத்தாருடைய அச்சுறுத்தல் இருப்பதால் இந்த வேலைகளெல்லாம் அவர்களுடைய பார்வையில் பளிச்சென பட்டுவிடும். ஆகவே, மீதியானியருக்குத் தெரியாமல் மறைந்திருந்து ஒரு திராட்சை ஆலையில் கோதுமையை கிதியோன் போரடிக்கிறார்; இந்த ஆலை ஒரு பாறையில் குடையப்பட்ட பெரிய தொட்டிபோல் இருந்திருக்கலாம். (நியாயாதிபதிகள் 6:11) அங்கே கோதுமை மணிகளை சிறியளவில் மட்டுமே ஒரு தடியால் அடிக்க முடிந்திருக்கலாம். இத்தகைய சூழல்களில், கிடைக்கும் வாய்ப்பை கிதியோன் பயன்படுத்திக் கொள்கிறார். கர்த்தரின் தூதன் கிதியோனுக்குத் தரிசனமாகி, ‘பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்’ என்று சொல்கிறபோது அவருக்கு உண்டாகும் ஆச்சரியத்தை கற்பனை செய்து பாருங்கள். (நியாயாதிபதிகள் 6:12) திராட்சை ஆலையில் இரகசியமாக தானியங்களைப் போரடிக்கும் கிதியோன் நிச்சயமாகவே தன்னை ஒரு பராக்கிரமசாலியென நினைத்துக்கொள்வதில்லை. என்றாலும், இஸ்ரவேலில் வீரதீரமிக்க ஒரு தலைவராக கிதியோன் இருக்க முடியுமென்ற நம்பிக்கை கடவுளுக்கு இருந்ததை அந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. கர்த்தர் ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனே உருவாக்கியுள்ளார். கிதியோன் போல எதிரிகளுக்கு (சாத்தானுக்கு) பயந்த நிலையில் வாழ்ந்து வருகின்றீர்களா? கர்த்தர் இன்றைக்கு உங்களை நோக்கி உலகத்தின் காரியங்களால் பராக்கிரமசாலியே என்று அழைக்கின்றார். கர்த்தர் அன்றைக்கு கிதியோனை பராக்கிரமசாலியே என்று அழைத்து ‘இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்’ பொறுப்பை கிதியோனிடம் கர்த்தர் ஒப்படைத்தார். கிதியோனோ தாழ்மையுடன் இவ்வாறு கூறுகிறார்: “ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” என்று கர்த்தரிடம் தனது நிலையை கூறுகின்றார். கர்த்தரோவென்றால் தாழ்மையில் சிறியவனாக காணப்பட்ட கிதியோனைக் கொண்டு மிகப்பெரிய விடுதலையை இஸ்ரயேல் ஜனங்களுக்கு கொடுத்தார். இதை வாசிக்கின்ற நீங்கள் ஒருவேளை தாழ்மையில் சிறியவனாக காணப்படுவீர்கள் என்று சொன்னால் கர்த்தர் உங்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை மறவாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. 

"தனக்கானதை தேடாத" ஆவிக்குரிய வளர்ச்சி!

"தனக்கானதை தேடாத" ஆவிக்குரிய வளர்ச்சி!

செய்தி: சகரியா பூணன்

"பி ள்ளை வளர்ந்து.... ஞானத்தினால் நிறைந்தது" (லூக்கா 2:40). நாசரேத் ஊரில், இயேசு வாழ்ந்த முப்பது ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஞானத்தில் வளர்ந்தார்! அவருடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமல் "ஒருநாள் கூட" வீணாகவில்லை எனக் கூறுவதே உண்மையாகும். இங்ஙனம் ஜீவிப்பவனே முழு இருதயம் கொண்டவன் என நாம் கூறிட முடியும். அதாவது, இயேசுவைப் போலவே தன் வாழ்விலும் தேவசித்தம் முழுவதும் நிறைவேறும் பொருட்டு தன் ஜீவிய நாட்களை முழுமையாய் பயன்படுத்திக் கொண்ட ஒருமனிதன்!

ஒரு மனிதனின் ஆவிக்குரிய வளர்ச்சியை கோபம், அசுத்த சிந்தை, பொய்சொல்லுதல்.... போன்ற பாவங்களை அவன் ஜெயித்து வாழ்ந்த வாழ்க்கையை மட்டும் வைத்து கணக்கிட முடியாது. ‘கனி’ மெய்யாகவே நல்லதாக இருப்பதற்கு முன்பாக மரம் நல்லதாக இருக்கவேண்டும்! கோபத்தையும், பாலியத்திற்குரிய பாவங்களையும், பொய்யையும்.... ஜெயித்து வாழவேண்டிய முக்கியத்துவத்தை புறஜாதியாரின் மார்க்கங்கள்கூட வலியுறுத்துகிறதே! காரியம் இவ்வாறாய் இருப்பதால், நாம் எந்த அளவு "தனக்கானதைத் தேடும்" சுபாவத்திலிருந்து விடுதலையாகியிருக்கிறோம் என்பதை வைத்தே நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி கணக்கிடப்படுகிறது!


நம் எல்லா பாவங்களுக்கும் ‘ஆணிவேராக’ நிற்கும் பிரதான பாவமே ‘தனக்கானதைத் தேடும்’ பாவமாகும். ஆம், நம் புகழ், நம் பெயர் பிரஸ்தாபம், நம் சொந்த ஆதாயங்கள்..... எனத் தேடுவதே தனக்கானதைத் தேடும் கொடிய சுபாவமாகும்!!

சார்லஸ் பின்னி, "ஒரு மனிதன் எதற்காக வாழ்ந்தான் என்ற முடிவே, அவன் பாவியா அல்லது பரிசுத்தவானா என்பதை நிர்ணயம் செய்கிறது" என தீர்க்கமாய் கூறினார். நம்முடைய சில செய்கைகளோ அல்லது நாம் பேசிய சில வார்த்தைகளோ அல்ல, மாறாக.... நம் ஜீவியத்தின் அடித்தள நோக்கம் என்ன என்பதை வைத்தே நாம் முழு இருதயம் கொண்ட இயேசுவின் சீஷர்களாய் இருக்கிறோமா? அல்லது இல்லையா? என்பதை நிரூபணம் செய்கிறது!

உங்கள் வாழ்க்கை, "தேவனுடைய மகிமையைத் தேடுவது ஒன்றே என் விருப்பம்!" என்பதாய் இருக்குமென்றால் மாத்திரமே, நீங்கள் தனக்கானதைத் தேடும் தீமையிலிருந்து விடுதலையாகி இருக்கிறீர்கள் என அறிந்து கொள்ள முடியும்!!

"ஆமென்" என்பது நம் வாழ்வில் மெய்யாய் மாறவேண்டும்!

"ஆமென்" என்பது நம் வாழ்வில் மெய்யாய் மாறவேண்டும்!

செய்தி: சகரியா பூணன்

நம் வாயின் அறிக்கை அத்தனையாய் முக்கியமானதாகும். தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்வதென்பது, தேவன் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லுவதாகும்! இவ்வாறு சொல்லுவது நம்மில் யாருக்கும் கஷ்டமாக இருக்குமோ?! ஆம், நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு "ஆமென்" (அப்படியே ஆகக்கடவது!) எனக் கூறுவது மத்திரமே தேவையாயிருக்கிறது.

வேதவாக்கியங்களில் "விசுவாசித்தான்" என்ற பதம் முதன் முதலாக ஆதியாகமம் 15-ம் அதிகாரத்தில்தான் உபயோகிக்கப்படுத்தப் பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில், பிள்ளை இல்லாமலிருந்த ஆபிராமை நோக்கி தேவன், "வானத்து நட்சத்திரங்களைப்போல உனக்குச் சந்ததி உண்டாயிருக்கும்!" எனக் கூறினார். அதற்கு "ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான்" என ஆதியாகமம் 15:6 பதிலுரைக்கிறது. "விசுவாசித்தான்" என்று இங்கு கூறப்பட்டிருக்கும் வார்த்தைக்கு எபிரெய பாஷையில் ‘ஆமென்’ என்ற பதமே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆமென்’ என்பதற்கு "அப்படியே ஆகக்கடவது" என்பதே பொருளாகும். எனவே, இங்கு தேவன் உரைத்த வாக்குதத்ததிற்கு ஆபிராம் செய்ததெல்லாம் "ஆமென்" என கூறியது மாத்திரமே! இங்ஙனம், தேவனிடம் "ஆமென்!" எனக் கூறுவதே உண்மையான விசுவாசமாகும்!!

ஆபிராம், இதற்குப் பிறகு "திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்" என அர்த்தங்கொண்ட "ஆபிரகாம்" என்ற புதிய பெயரை தேவனிடமிருந்து இப்போது பெற்றுவிட்டான்! இருப்பினும் அவனுடைய மனைவியாகிய சாராளோ இன்னமும் பிள்ளையற்றவளாகவே இருந்தாள். ஆபிரகாமோ இதினிமித்தம் சிறிதுகூட கிலேசம் கொள்ளவேயில்லை. அவன் இன்னமும் தன்னை "திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்" என்றே அழைத்துக்கொண்டான். ஏன் தெரியும? தேவன் அவனுக்கு அப்படிச் சொல்லியிருந்தார்! அதை ஆபிரகாம் அப்படியே விசுவாசித்தான்!! விசுவாசத்தை அறிக்கை செய்வதென்பதின் பொருள் இதுதான்: "தேவன் உரைத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதை நம் கண்கள் காணாதிருக்கும்போதே "தேவன் சொன்னதை" அப்படியே அறிக்கை செய்வதுதான் உண்மையான விசுவாச அறிக்கையாகும்".

இதைத்தான் நாமும் செய்யும்படி தேவன் கூறுகிறார். . . அவர் தன் வார்த்தையில் கூறியதை அப்படியே மறுபடியும் அறிக்கைசெய்து கூறவேண்டும்! அவ்வளவுதான்!!

‘எது நடந்தாலும்’ வேதவாக்கை பற்றிநடப்பதே விசுவாச வாழ்க்கை!

‘எது நடந்தாலும்’ வேதவாக்கை பற்றிநடப்பதே விசுவாச வாழ்க்கை!

செய்தி: சகரியா பூணன்

அநேக சமயங்களில் நம்முடைய ‘உணர்ச்சிகள்’ (Feelings ) நம்மை வஞ்சிக்கக் கூடியவைகளாகவே இருக்கிறது. ஆகவே இவ்வித உணர்ச்சிகளை நாம் ஒருபோதும் சார்ந்து நம்பிவிடவே கூடாது! உண்மை (Fact); விசுவாசம் (Fath); உணர்ச்சி (Feelings) ஆகியவைகளை மூன்று மனிதர்களாக சுட்டிக்காட்டி கூறிடும் உவமை ஒன்றுண்டு. இந்த மூன்று மனிதர்களும் ஓர் ஒடுக்கமான சுவற்றின்மேல் ஒருவர்பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர். ‘உண்மை’ (சத்தியம்) முதலாவதாக முன்னோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து ‘விசுவாசம்’ நடந்து சென்று கொண்டிருந்தது. கடைசியாக ‘உணர்ச்சி’ விசுவாசத்தை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. விசுவாசம் தன் கண்களை, முன் சென்று கொண்டிருந்த உண்மையின்மீது பதித்தது வரை சகலமும் சுமுகமாய் நடந்தேறியது! அதேபோல், விசுவாசத்தை உணர்ச்சியானது விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து சென்றது!! ஆனால் தன்னைப் பின்தொடர்ந்து வரும் உணர்ச்சியைக் காண்பதற்கு விசுவாசம் திரும்பிப் பார்த்தவுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தது. . . மரணத்தை தழுவியது! அதோடு சேர்ந்து உணர்ச்சியும் செத்து அழிந்தது!! ஆனால் உண்மையோ, தனக்குப் பின்னால் நடந்த எந்த நிகழ்ச்சியையும் சிறிதுகூட பொருட்படுத்தாமல் சுவற்றின்மீது கெம்பீரமாய் நடைபோட்டு ‘தன்னந்தனியே’ சென்று கொண்டேயிருந்தது!!

இந்த உவமை நமக்கு கற்றுத்தரும் பாடம் மிகத்தெளிவாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையே, என்றென்றும் மாறாத உண்மை நிறைந்ததாகும் (ரோமர் 10:17). நம்முடைய விசுவாசம் தேவனுடைய வார்த்தையை மத்திரமே உற்று நோக்கிக்கொண்டிருந்தால் ஒருக்காலும் இடறிவிழும் அபாயத்திற்குள் பிரவேசித்திட மாட்டோம்!


விசுவாசத்தை தொடர்ந்து உணர்ச்சிகள் பின்பற்றி வரத்தான் செய்யும்! ஆனால் நம்முடைய உணர்ச்சிகளை நாம் திரும்பிப் பார்க்கத் துவங்கிவிட்டால், நாம் மிக எளிதில் நிலை தடுமாறி அதைரியத்திற்குள்ளும். . . கடும் குற்ற ஆக்கினைக்குள்ளும் வீழ்ந்து மாய்ந்துவிடுவோம்!

'நான் தேவனுடைய பிள்ளை’ என்ற உறுதி நமக்கு வேண்டும்!

'நான் தேவனுடைய பிள்ளை’ என்ற உறுதி நமக்கு வேண்டும்!

செய்தி: சகரியா பூணன்

"நாம் அவருடைய பிள்ளைகள்" என நம் இருதயத்தில் சம்பூர்ணமான உறுதிகொண்டிருக்கவே தேவன் விரும்புகிறார். இந்த உண்மையைக் குறித்து நாம் சந்தேகத்திற்குள் பிரவேசிக்க தேவன் ஒருபோதும் விரும்புவதே இல்லை.

நம்மைச் சந்தேகத்திற்குள் தள்ளும்படி, சாத்தானே சதா முயற்சித்துக் கொண்டிருக்கிறான். நாமோ சந்தேகத்திற்குள் பிரவேசிக்கத் தேவையில்லை! ஏனெனில், நமது சந்தேகங்களை அழித்து நமக்கு உறுதி செய்யும்படி அநேக வாக்குதத்தங்களை தேவன் தன் வார்த்தையில் தந்தருளியுள்ளார்!


அவ்வித வாக்குதத்தங்களில் ஒரு சிலவற்றை சற்றே நோக்குங்கள்: 1) "என்னிடத்தில் வருகிறவனை நான் (ஒருக்காலும்) புறம்பே தள்ளுவதில்லை. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 6:37,47) என இயேசுவே கூறினார்.

2) "அவரை (ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை) ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்" (யோவான் 1:12).

3) "நான் அவர்கள் அநியாயங்களை கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்" என்றும் ஆண்டவர் கூறினார் (எபிரெயர் 8:12).

தேவனுடைய வாக்குத்தத்தங்களில் விசுவாசம் வைப்பதென்பது ஓர் நதியைக் கடப்பதற்காக கட்டப்பட்ட வலுவான பாலத்தின்மீது நடக்கும்படி நம் கால்களை வைப்பதற்கே ஒப்பாகும்! நம்முடைய கால்கள் பெலஹீனமானதாயிருக்கலாம்! அதினாலென்ன?... பாலம் உறுதியானதாயிருந்தால், அது போதுமே!! இப்போது எது உறுதியான விசுவாசம் என்பதற்கு நீங்களே பதில் கூறுங்கள்: ஆம், "ஓர் வலுவான தேவனையும் அவர் அளித்த வாக்குதத்தங்களையும் முழுவதுமாய் நம்பிச் சார்ந்துகொள்ளுவதே" உறுதியான விசுவாசம் ஆகும்!! இன்றிலிருந்து "நான் தேவனுடைய பிள்ளை" என உரத்த சத்தமாய் விசுவாச உறுதியுடன் அறிக்கை செய்துவிடுங்கள்!!

எக்காலத்தும் தேவனை சார்ந்திருப்பதே விசுவாசம்!

எக்காலத்தும் தேவனை சார்ந்திருப்பதே விசுவாசம்!

செய்தி: சகரியா பூணன்

தேவன்மேல் விசுவாசம் வைப்பது என்பதற்குப் பொருள் யாதெனில், அவரையே முழுமையாய் சார்ந்துகொண்டு.... அவர்தம் வார்த்தையில் கூறிய எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதே யாகும்! அதாவது, நம் உணர்வுகள் என்னதான் கூறினாலும் அல்லது வேறு யாரோ என்னதான் மறுத்தாலும் அவைகளை ஒரு பொருட்டாய் எண்ணாமல் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பது ஆகும். இது அவ்வளவாய் மிக எளியதேயாகும்!

தேவன் மீது விசுவாசம் வைக்கும்பொருட்டு, அவரைக்குறித்த குணாதிசயத்தில் மூன்று தன்மைகளைக் காண்கிறோம். 1) அவர் நம்மை, சொல்லொண்ணா சிநேகத்தில் அன்புகூருகிறார். 2) அவரே சம்பூர்ண ஞானமுள்ளவர். 3) அவரே சர்வ வல்லமையுள்ளவர்! இவ்வாறு அவரைக் குறித்த இந்த மூன்று உண்மைகளை நாம் விசுவாசிப்பது கஷ்டமான காரியமா? இல்லவே இல்லை! அப்படியானால், நாம் அவரை முழு இருதயத்தோடு நம்பி விசுவாசிப்பதற்கு இனியும் கஷ்டம் என்று சொல்லாதிருப்போமாக!!


ஏதேன் தோட்டத்தில் ஏவாள் என்று சாத்தானின் குரலிற்கு செவிகொடுத்தாளோ, அன்றே விசுவாச வீழ்ச்சி ஏற்படத் துவங்கியது. தன்னுடைய நன்மைக்காகவே தேவன் கற்பனைகளைக் கொடுத்திருக்கிறார் என்பதை விசுவாசிக்க அன்று ஏவாள் தவறிவிட்டாள். இவ்விதம் தேவன் அவள்மீது வைத்திருந்த பூரண அன்பில் ஏவாளுக்கு விசுவாசமில்லாதபடியால், அவள் தேவனுக்கு கீழ்படியாமற் போனாள்!

விசுவாசத்தின் மூலமாகவே தேவனுடைய ஈவுகளைப் பெற்றிட முடியும். நமக்கு கொடுப்பதற்கென தேவனிடம் அனேக அற்புதமான ஈவுகள் உள்ளன! அவரளிக்கும் ஈவுகள் யாவும், கிருபையின் ஈவுகளே ஆகும்! ஆனால், இப்பரம ஈவுகளைப் பெறுவதற்கோ விசுவாசம் நமக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது.

"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டோம்" (எபேசியர் 2:8) என்றே சத்தியவேதம் கூறுகிறது. உன்னதத்தின் திரளான ஆசீர்வாதங்களை ஏந்திக்கொண்டு நம்மை நோக்கி ஏகிவரும் தேவனுடைய கரமே கிருபையாகும்! தேவனுடைய கரத்தில் பொதிந்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி மேல் நோக்கி உயர்த்திடும் நம் கரமே விசுவாசமாகும்!

சாத்தானோடு கொண்ட ‘யாதொரு’ தொடர்பையும் துண்டியுங்கள்!

சாத்தானோடு கொண்ட ‘யாதொரு’ தொடர்பையும் துண்டியுங்கள்!

செய்தி: சகரியா பூணன்

நாம் இரட்சிக்கப்பட்ட பின்பு சரிசெய்து சீர்ப்படுத்தவேண்டிய விஷயங்களில் ஓர் முக்கியமான பகுதி உள்ளது. அது யாதெனில், சாத்தானோடும் பொல்லாத ஆவிகளோடும் நாம் கொண்டிருந்த உறவேயாகும். நீங்கள் வானசாஸ்திர அஞ்சனத்திலும், விக்கிரக வழிபாட்டிலும், கைரேகை பார்ப்பதிலும், மை வைத்து மேஜிக் செய்வதுமானவைகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது ‘ராக் மியூசிக்’, தீமையான போதை மருந்துகளில் ஈடுபாடு கொண்டிருந்தால், இவைகளின் மூலம் நீங்கள் சாத்தானோடு கொண்டிருந்த உறவை இப்போது முற்றிலுமாய் துண்டித்துக் கொள்ளவேண்டும்! ‘இதுபோன்ற’ வேறு காரியங்களில் நீங்கள் ஒருவேளை உங்களையும் அறியாமலே தொடர்பு வைத்திருந்தாலும் அவைகளையும் நீங்கள் கண்டிப்பாகத் துண்டித்துக்கொள்ள வேண்டும்!!

இதற்கு நீங்கள் முதலாவது செய்யவேண்டிய காரியம் யாதெனில், நீங்கள் வைத்திருக்கும் எல்லா விக்கிரகங்களையும், மாயஜால புஸ்தகங்களையும், அசுத்த ஆவிகளின் பாதுகாப்பைத் தேடும் ‘தாயத்து’ போன்ற வஸ்துக்களையும் நீங்கள் முற்றிலுமாய் உடைத்தெறிந்து அழிக்கவேண்டும்! (அவைகளில் எதையும் விலையுயர்ந்ததென விற்காமல், அழித்துவிடவேண்டும்! அப்போஸ்தலர் 19:19-ஐ வாசித்துப்பாருங்கள்). அவ்வாறு செய்த பின்பு நீங்கள் இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நான் அறிந்தோ அல்லது அறியாமலோ சாத்தானோடு வைத்திருந்த எல்லாத் தொடர்பையும் துண்டித்துவிட்டேன்" என அறிக்கைசெய்து ஜெபியுங்கள். இவ்வாறு ஜெபித்த பின்பு நீங்கள் நேருக்கு நேராய் சாத்தானுக்கு முன்பாகத் திரும்பிநின்று, "சாத்தானே, என் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உன்னை நான் கடிந்துகொள்ளுகிறேன். நான் இப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன். இனிமேல் நீ என்னை ஒருக்காலும் தொடவே முடியாது!" என தைரியமாய் கூவி முழங்குங்கள். ஏனெனில் யாக்கோபு 4:7 "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்!" என தெளிவாய் வக்குரைத்துக் கூறுகிறது. ஆகவே சத்தானுடைய பிடி இனிமேல் உங்கள்மீது இருக்கவே இருக்காது!

உங்களுக்கு தவறிழைத்தவர்களை மன்னியுங்கள்!

உங்களுக்கு தவறிழைத்தவர்களை மன்னியுங்கள்!

செய்தி: சகரியா பூணன்

"மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத்தேயு 6:15) என இயேசு கூறினார். இதை இயேசு மேலும் வலியுறுத்திக் கூறும்பொழுது நாம் பிறரை மேலோட்டமாக அல்ல "மனப்பூர்வமாய்" மன்னிக்க வேண்டும் என்றும் கூறினார் (மத்தேயு 18:35). நாம் பிறரை ‘முழுவதுமாய்’ ‘மனபூர்வமாய்’ மன்னிக்கா விட்டால், நாம் தேவனால் மன்னிக்கப்படுவதும் ஒருக்காலும் கைகூடாது! பிறர் செய்த செயலை நாம் ஒருவேளை மறக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் எப்பொழுதெல்லாம் பிறர் செய்த தீமையை நினைவுகூரும்படி நாம் சோதிக்கப்படுகிறோமோ, அப்பொழுதெல்லாம் அத்தீமைகளை நினைப்பதற்கு மறுத்துவிடநம்மால் நிச்சயம் முடியும்!

சில சமயங்களில் உங்களுக்குச் சொல்லொண்ணா தீமை விளைவித்த ஒருவரை மனப்பூர்வமாய் மன்னிக்க முடியாதபடி நீங்கள் கஷ்டப்படலாம். அச்சமயங்களில், அவரை மன்னிப்பதற்கு உதவும்படி தேவனிடம் முறையிட்டு ஜெபியுங்கள். அப்போது எந்த மனிதரையும் மன்னிப்பதற்குரிய விருப்பத்தையும் அதை நிறைவேற்றுவதற்குரிய பெலனையும் தேவன் உங்களுக்குத் தருவதை நீங்களே கண்டு ருசிப்பீர்கள்!

நம்முடைய கோடிக்கணக்கான பாவங்களை தேவன் இலவசமாய் மன்னித்திருப்பதை நீங்கள் சற்றே தியானித்தால், அதே போல பிறரை மன்னிப்பது உங்களுக்கு இப்போது கஷ்டமாயிராது. நாம் யாரையேனும் மன்னியாதிருக்கும் போதுதான் சாத்தான் நம்மைத் தன் வல்லமையால் பிடித்துக்கொள்ளுகிறான்! எனவேதான், "சத்தானாலே மோசம் போகாதபடிக்கு பிறரை மன்னியுங்கள்!" என பவுல் புத்தி கூறினார் (2கொரிந்தியர் 2:10,11).

உங்கள் சகோதரனையோ அல்லது சகோதரியையோ மன்னிக்காவிட்டால், தேவன் உங்கள் ஜெபங்களை கேட்கவே மாட்டார். "என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" என வேதம் தெள்ளத் தெளிவாகவே கூறுகிறது (சங்கீதம் 66:18). தேவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டார் என்றுகூட இல்லாமல், எனக்குச் ‘செவிகொடுக்கக்கூட’ மாட்டார் எனக் கூறப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா! இனியும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாதிருப்போமாக!!

இரட்சிக்கப்பட்டதற்கும் ‘கனி’ வேண்டும்!

இரட்சிக்கப்பட்டதற்கும் ‘கனி’ வேண்டும்!

செய்தி: சகரியா பூணன்

யோவான்ஸ்நானகன் பரிசேயர்களைப் பார்த்து, "மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள்" என அழைப்பு விடுத்தார் (மத்தேயு 3:8). நாம் உண்மையாகவே மனந்திரும்பியிருப்போமென்றால், அவ்வித மனந்திரும்புதல் நம் முழு ஜீவியத்தையும் மாற்றிவிடும்!

நாம் மனந்திரும்பியவுடன் செய்யவேண்டிய முதலாவது காரியம் யாதெனில், நம் கடந்தகால ஜீவியத்தில் செய்த தவறுகளினிமித்தம் ஏற்பட்ட நஷ்டங்களைத் திரும்பச்செலுத்துவதேயாகும் (Restitution). சகேயுவைக் குறித்து லூக்கா சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். இயேசு அவனுடைய வீட்டிற்குள் பிரவேசித்தவுடன், அவன் தன் பாவங்களை உணர்ந்தான் (லூக்கா 19:1-10). அந்த சகேயு பணத்தை சிநேகித்த மனிதனாயிருந்தான்! இருப்பினும், மனந்திரும்புதல் இன்னதென்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்!! தான் இயேசுவின் சீஷனாய் மாறவேண்டுமென்றால் தன் ஜீவியத்தில் இழைத்த எல்லாத் தவறுகளையும் சரிசெய்திட வேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருந்தான். அவ்வாறு அவன் செயல்பட்டால், அதிகமான பண நஷ்டம் தனக்கு ஏற்படும் என்பதையும் அறிந்திருந்தான்! ஏனெனில் அவன் அநேகரின் பணத்தை ஏமாற்றி அபகரித்தவன்!! இருப்பினும், அவனோ தன் மனந்திரும்புதலில் முழு இருதயமாய் இருந்துவிட தீர்மானங் கொண்டான். எனவேதான், தன் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கும், தான் அநியாயமாய் அபகரித்தவர்களிடம் நாலத்தனையாகவும் திரும்பச் செலுத்துவேன் என ஆண்டவரிடம் கூறினான்.


இவ்வாறு சகேயு "திரும்பச் செலுத்துவேன்" எனக் கூறியதால் மத்திரமே, "இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது" என இயேசு அறிவித்தார்! "நான் திரும்பச் செலுத்துவேன்" என்ற ஆயத்தமான விருப்பமே உண்மையான இரட்சிப்பின் அடையாளங்களில் ஒன்றாகும் (லூக்கா 19:1-10).

யாரோ சில ஜனங்களை நீங்கள் ஏமாற்றியிருந்தால், அவர்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது, நீங்கள் செய்த தவற்றிற்காக மன்னிப்பும் கேட்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், உங்கள் ஜீவியத்தில் எவ்விதம் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதையும் அவர்களிடம் கூறுங்கள்! நீங்களாகவே இதைச் செய்வதற்கு உங்களுக்கு தைரியமில்லாதிருந்தால், ஒரு சகோதரனை உங்களோடுகூட அழைத்துச்சென்று திரும்பச்செலுத்தி ஒப்புரவாகுங்கள்.

உங்களால் எல்லாப் பணத்தையும் உடனடியாகத் திருப்பிச் செலுத்த முடியவில்லையா? பரவாயில்லை! அவைகளைத் தவணை முறையில் திரும்பச் செலுத்துங்கள். ஆனால் குறைந்தது ஐந்து ரூபாயாவது திரும்பச்செலுத்தி உங்கள் தவணையைத் துவக்குங்கள். சகேயு எல்லாப் பணத்தையும் திரும்பச் செலுத்திய பின்பு அல்ல... ‘திரும்பச்செலுத்துவேன் என அவன் என்று தீர்மானித்தானோ’ அன்றே தேவன் அவனை ஏற்றுக்கொண்டார்!

மனம்திரும்புவதே விசுவாசத்தின் ஆதாரம் !

மனம்திரும்புவதே விசுவாசத்தின் ஆதாரம் !

செய்தி: சகரியா பூணன்

ஆதிக்கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட ஆழ்ந்த தன்மையும், அர்ப்பணமும், வல்லமையும் இன்றுள்ள அனேகமான விசுவாசிகளிடம் காணப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீகளா? ஆம், இவர்கள் சரியானவிதமாய் மனம்திரும்பவில்லை என்பதே பிரதான காரணமாகும். இவர்கள் கிறுஸ்துவை விசுவாசித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இவர்களோ ‘முதலாவது’ மனந்திரும்பாமலே விசுவாசித்தவர்கள்! எனவேதான் இவர்களின் கிறிஸ்தவ ஜீவியம் ஆழமற்ற "பொக்குத்தன்மை" கொண்டதாய் உள்ளது.

உதாரணமாய், இன்று அநேகருக்குப் பழக்கமான ஓர் கீர்த்தனைப் பாடலின் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்:

  "மா கொடிய துரோகியானாலும்
  மனதார விசுவாசித்தால் போதுமே;
  அக்கணமே அக் கொடியோன்
  இயேசுவின் மன்னிப்பைப் பெற்றிடலாகுமே!"

இவ்வாறு, ஓர் கொடிய துராகிதன் ‘வெறுமனே’ விசுவாசித்து விட்டால் இயேசுவின் மன்னிப்பை உண்மையாகவே பெற்றிட முடியுமா? அவன் ‘முதலாவது’ மனந்திரும்பவேண்டியது அவசியமில்லையா?

இக்கேள்விக்கு நீங்கள், "உண்மையான விசுவாசம் மனந்திரும்புதலோடு இணைந்தே வருகிறது" என பதிலுரைக்கலாம். ஆனால் நீங்கள் எண்ணிக்கொள்ளும் இந்த விளக்கத்தை அக்கொடிய துராகிதன் அறியாதிருப்பானென்றால், தான் விசுவாசித்ததினிமித்தம் ‘மறுபடியும் பிறந்துவிட்டதாக’ அல்லவா தன்னைத் தவறாக முடிவு செய்திருப்பான்? இதினிமித்தம் தன் ஜீவிய காலமெல்லாம் கொடிய ஏமாற்று வஞ்சகத்தில் அம்மனிதன் சிக்கிக் கொள்வானே!

இயேசுகிறிஸ்துவே பிரசங்கித்த முதல் செய்தி யாதெனில், "மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்" (மாற்கு 1:15) என்பதுதான். இதே செய்தியைத்தான் அவருடைய அப்போஸ்தலர்களும் பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளை கொடுத்தார் (லூக்கா 24:47). அதை அப்படியே அப்போஸ்தலர்களும் கொஞ்சமும் பிசகாமல் பிரசங்கித்தார்கள் (அப்போஸ்தலர் 20:21). ஆம், தேவனுடைய வார்த்தை இதைக்குறித்து மிகவும் தெளிவாகவே இருக்கிறது! நீங்கள் யாராயிருந்தாலும், உங்களுக்கு காரியம் நன்றாய் நடந்து நீங்கள் உண்மையாகவே குணப்பட வேண்டுமென்றால்.... மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் ஒருக்காலும் பிரித்துவிடாதீர்கள்!! இந்த இரண்டையும் தேவனே ஒன்றாக இணைத்துள்ளார். எனவே தேவன் இணைத்ததை மனிதன் ஒருக்காலும் பிரிக்கலாகாது!

அவருடைய கட்டளைகள் வியக்கத்தகு வாக்குத்தத்தங்கள் !

அவருடைய கட்டளைகள் வியக்கத்தகு வாக்குத்தத்தங்கள் !

செய்தி: சகரியா பூணன்

ஆதிமுதலாய் "மனுஷன் எங்ஙனம் வழ வேண்டும்?" என தேவன் விரும்பினாரோ அவ்வித வாழ்க்கையை மனிதன் இப்போது வாழமுடியும், என்பதே சுவிசேஷத்தின் சுபிட்சமான செய்தியாகும்! கிறிஸ்துவின் அழைப்பிற்கு சிறிதும் பிசகில்லாமல் தங்களை சம்பூரணமாய் சமர்ப்பணம் செய்திடும் யாவரும் ஓர் தொடர்ச்சியான வெற்றி வாழ்க்கையை வாழ்ந்திட முடியும்!! ஆனால், துயரம் யாதெனில்... கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டோம் எனக்கூறும் திரளானோர் இந்த நற்சுவிசேஷம் வழங்கும் மகிமையான வாழ்விற்குள் இன்னமும் பிரவேசிக்கவேயில்லை! என்பதுதான்.

பாவத்தை ஜெயித்து வாழும் ஓர் உன்னத வாழ்க்கையைப் புதிய ஏற்பாடு நமக்கு வாக்களித்திருக்கிறது. இதற்குரிய அருமையான தேவ வாக்குதத்தத்தை ரோமர் 6:14, "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" என கெம்பீரமாய் கூறுகிறது!!

பயத்திலிருந்தும், கவலையிலிருந்தும், முற்றிலுமாய் விடுதலையாகி ஓர் தொடர்ச்சியான மகிழ்ச்சியின் வாழ்க்கையை வாழும்படி "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.... நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாதீர்கள்!" (பிலிப்பியர் 4:4,6) என கட்டளையிடும் தெய்வ வார்த்தையின் ரீங்காரத்தை கேளுங்கள்!!

நாம் எவைகளைச் செய்வதற்கு தேவன் பெலன் தருகிறாரோ, அவைகளை மாத்திரமே நாம் செய்யும்படி தேவன் கட்டளை கொடுக்கிறார் என்பதை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். ஆகவே, ஒன்றை நாம் செய்து சாதித்துவிடுவதற்கு தேவன் நமக்கு அருளும் கிருபையை காணும்போது, அவருடைய கட்டளைகள் அத்தனையும் வாக்குத்தத்தங்களால் இழையோடி இருக்கிறதே!" என நாம் வியக்காமல் இருக்கவே முடியாது!! எனவே, நாம் ஓர் தொடர்ச்சியான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழவேண்டும் எனவும்; முற்றிலுமாய் பயமும் கவலையுமற்ற வாழ்க்கை வாழவேண்டும் எனவும்... மேலே நாம் குறிப்பிட்ட தேவ கட்டளைகள், நாம் அவ்விதமான வாழ்க்கை வாழ்ந்துவிடுவதற்கென தேவன் நம்மைப் பெலப்படுத்தும் வாக்குத்தத்தங்களே என இப்போது அறிந்துகொள்கிறோம்!

இதேபோன்று புதிய ஏற்பாட்டில் எத்தனை எத்தனை மகிமையான வாக்குத்தத்தங்கள் இருக்கிறது தெரியுமா! இவ்வாறு தெய்வ கற்பனைகள் அத்தனையும் வாக்குத்தத்தங்களே என்ற உண்மையை நீங்கள் அறிந்துகொண்டால், "சுவிசேஷம் முழுவதும் சுபிட்சம் நிறைந்த செய்திகளே!" என நீங்கள் மனப்பூர்வமாய் ஏற்று மகிழ்வீர்கள்.

நிலைத்திருக்கும் வாழ்க்கையையே நாடுங்கள்

நிலைத்திருக்கும் வாழ்க்கையையே நாடுங்கள்

செய்தி: சகரியா பூணன்

இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளையாகிவிட்ட ஒருவனுக்கு, இக்காலத்திற்குரியவைகளைக் காட்டிலும் நித்தியத்திற்குரியவைகளே அதிக மேன்மையுள்ளதாய் இருக்கும்! அதாவது, பூமிக்குரியவைகளின் மதிப்பைக் காட்டிலும் பரலோகத்திற்குரியவைகளின் மதிப்பு இவனுக்கு இப்போது அதிக முக்கியமானதாயிருக்கும்.

நித்திய வாழ்வை நோக்கிச் செல்லும் நம்முடைய பயணத்தில், இவ்வுலகம் நாம் கடந்து செல்லும் ‘இடைவெளி’ மாத்திரமேயாகும். ‘தகுதியைப் பெறும் பரீட்சைக்காகவே’ நாம் இவ்வுலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் பரலோகத்திற்குரிய நித்தியமானவைகளைத் தெரிந்து கொள்கிறோமா? அல்லது இப்பூமிக்குரிய அநித்தியமானவைகளைத் தெரிந்து கொள்கிறோமா? என்பதைக் காண்பதற்காகவே தேவன் இப்போது நம்மை சோதித்தறிகிறார். நாம் ஞானமுள்ளவர்களாயிருந்தால், நித்தியத்தில் மதிப்புடையவைகளையே தெரிந்து கொள்வோம்!

ஒரு குழந்தை, 500 ரூபாய் நோட்டைக்காட்டிலும் ஓர் பளபளக்கும் வர்ணத்தாளையே விரும்பும். ஏனென்றால் இக்குழந்தைக்கு மதிப்பிடும் சாதுரியம் இல்லை! பரலோகத்திற்கும் நித்தியத்திற்கும் உரியவைகளுக்குப் பதிலாய் இப்பூமிக்குரியவைகளையே நாம் தெரிந்து கொண்டால், நாமும் இக்குழந்தையைப் போலவே நடந்து கொள்கிறோம்!!

"இவ்வுலகமும் அதிலுண்டான யாவும் கடந்து போகும்" என வேதாகமத்தில் மிகவும் தெளிவாக தேவன் நமக்கு கூறியிருக்கிறார். எனவே இப்பூமிக்குரிய தற்காலிகமானவைகளுக்காக நாம் ஜீவிப்பது, நம்முடைய பணத்தை சீக்கிரத்தில் நஷ்டமடைந்து திவாலாகப்போகும் வங்கியில் சேமிப்பதற்கொப்பாகும்!

ஞானமுள்ள மனிதனோ தன் பணத்தை ஓர் நிலையான வங்கியில் சேமித்துவைப்பான். இதைப்போலவே பரலோக ஞானமுள்ளவர்கள், நித்திய மதிப்புடையவைகளுக்காகவே ஜீவிப்பார்கள்! நித்திய மதிப்புடையவைகள்… நம்முடைய குணாதிசயங்களாகிய பரிசுத்தம், அன்பு, நற்குணம், மன்னிக்கும் தன்மை, தாழ்மை போன்றவைகளாகும்! நாம் இந்தப் பூமியை விட்டு கடந்து போகையில் இதுபோன்ற மேலான குணாதிசயங்களை மத்திரமே நம்மோடு எடுத்துச்செல்ல முடியும்!!

ஏனெனில், "ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" (எபிரெயர் 9:27). ஆம், இந்த "ஒரு வாழ்வை" நித்திய நோக்கத்தோடு வாழ்வதே சாலமும் சிறந்த வாழ்கையாகும்!

எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை! - செய்தி: சகரியா பூணன்


எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை!

செய்தி:  சகரியா பூணன்

நம் தேவன் மிகவும் நல்ல தேவன்! தம்முடைய பிள்ளைகளுக்கு எவ்வித தீமையாகிலும் சம்பவித்திட அவர் விரும்பவே மாட்டார்.

இவ்வுலகில் அநேக ஜனங்கள், பிறர் செய்த பில்லி சூனியத்தினாலோ அல்லது செய்வினையினாலோ துன்பம் அனுபவிக்கிறார்கள். உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருப்பீர்களென்றால், இதுபோன்ற சாத்தானுக்குரிய கிரியைகள் உங்களைத் துன்புறுத்த ஒருக்காலும் முடியாது! உங்களை இரட்சிக்கும்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை நீங்கள் கூப்பிடும்போது, உங்கள் மீதுள்ள எவ்வித பில்லி சூனியத்தின் வல்லமையும் "நொடிப்பொழுதில்" "இப்போதே" துரத்தப்பட முடியும்!

இயேசு சிலுவையில் மரித்தபோது, சாத்தானைத் தோற்கடித்து அவனுடைய வல்லமையை அடியோடு உரித்து போட்டார், என்றல்லவா வேதாகமம் கூறுகிறது! இது ஒரு நிலைத்த சத்தியமாகும். ஆனால், பாவமன்னிப்பைப் போலவே, "நீங்கள் ஏற்றுக்கொள்ளும்வரை" சாத்தானின் தோல்வியும் உங்கள் வாழ்க்கையில் நிஜமாய் மாறிட முடியாது!!

"மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்" (எபிரெயர் 3:14,15) என வேதம் கூறுவதைப் பாருங்கள்! "தேவனுக்கு கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7) என்றும் வேதம் கூறுகிறது!

நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறியபின்பும்கூட சாத்தான் நம்மை சோதிப்பதற்கு தேவன் அனுமதிக்கிறார். ஏனென்றால் இவ்வாறாகத்தான் நாம் பெலன் கொண்டவர்களாய் மாறிடமுடியும். சாத்தானை எதிர்த்து நின்று அவனுடைய எல்லா தாக்குதல்களையும் ஜெயிப்பதற்குரிய வல்லமையை நமக்குத் தரும்படி, நமக்குள் வாசம்செய்யும் பரிசுத்தாவியையும் இப்போது நாம் பெற்றிருக்கிறோம். இனியும் இந்த வையகத்திலுள்ள யாதொரு தீமையும் நம்மை மேற்கொண்டு மடங்கடித்திட ஒருபோதும் முடியாது, முடியவே முடியாது!! இரட்சகர் இயேசுவின் மூலமாய் எல்லா தீ்மைகளிலிருந்தும் ஜெயங்கொடுக்கிற தேவனுக்கே ஸ்தோத்திரம்!