எக்காலத்தும் தேவனை சார்ந்திருப்பதே விசுவாசம்!

எக்காலத்தும் தேவனை சார்ந்திருப்பதே விசுவாசம்!

செய்தி: சகரியா பூணன்

தேவன்மேல் விசுவாசம் வைப்பது என்பதற்குப் பொருள் யாதெனில், அவரையே முழுமையாய் சார்ந்துகொண்டு.... அவர்தம் வார்த்தையில் கூறிய எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதே யாகும்! அதாவது, நம் உணர்வுகள் என்னதான் கூறினாலும் அல்லது வேறு யாரோ என்னதான் மறுத்தாலும் அவைகளை ஒரு பொருட்டாய் எண்ணாமல் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பது ஆகும். இது அவ்வளவாய் மிக எளியதேயாகும்!

தேவன் மீது விசுவாசம் வைக்கும்பொருட்டு, அவரைக்குறித்த குணாதிசயத்தில் மூன்று தன்மைகளைக் காண்கிறோம். 1) அவர் நம்மை, சொல்லொண்ணா சிநேகத்தில் அன்புகூருகிறார். 2) அவரே சம்பூர்ண ஞானமுள்ளவர். 3) அவரே சர்வ வல்லமையுள்ளவர்! இவ்வாறு அவரைக் குறித்த இந்த மூன்று உண்மைகளை நாம் விசுவாசிப்பது கஷ்டமான காரியமா? இல்லவே இல்லை! அப்படியானால், நாம் அவரை முழு இருதயத்தோடு நம்பி விசுவாசிப்பதற்கு இனியும் கஷ்டம் என்று சொல்லாதிருப்போமாக!!


ஏதேன் தோட்டத்தில் ஏவாள் என்று சாத்தானின் குரலிற்கு செவிகொடுத்தாளோ, அன்றே விசுவாச வீழ்ச்சி ஏற்படத் துவங்கியது. தன்னுடைய நன்மைக்காகவே தேவன் கற்பனைகளைக் கொடுத்திருக்கிறார் என்பதை விசுவாசிக்க அன்று ஏவாள் தவறிவிட்டாள். இவ்விதம் தேவன் அவள்மீது வைத்திருந்த பூரண அன்பில் ஏவாளுக்கு விசுவாசமில்லாதபடியால், அவள் தேவனுக்கு கீழ்படியாமற் போனாள்!

விசுவாசத்தின் மூலமாகவே தேவனுடைய ஈவுகளைப் பெற்றிட முடியும். நமக்கு கொடுப்பதற்கென தேவனிடம் அனேக அற்புதமான ஈவுகள் உள்ளன! அவரளிக்கும் ஈவுகள் யாவும், கிருபையின் ஈவுகளே ஆகும்! ஆனால், இப்பரம ஈவுகளைப் பெறுவதற்கோ விசுவாசம் நமக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது.

"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டோம்" (எபேசியர் 2:8) என்றே சத்தியவேதம் கூறுகிறது. உன்னதத்தின் திரளான ஆசீர்வாதங்களை ஏந்திக்கொண்டு நம்மை நோக்கி ஏகிவரும் தேவனுடைய கரமே கிருபையாகும்! தேவனுடைய கரத்தில் பொதிந்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி மேல் நோக்கி உயர்த்திடும் நம் கரமே விசுவாசமாகும்!

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்